புரட்டாசி 4வது சனிக்கிழமை நைனாமலையில் குவிந்த பக்தர்கள்
சேந்தமங்கலம்: புரட்டாசி, 4வது சனிக்கிழமையையொட்டி, நைனாமலையில் விரதமிருக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.சேந்தமங்கலம் யூனியன், நைனாமலையில் வருதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் புரட்டாசி, 4வது சனிக்கிழமையில் விரதம் இருக்க ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அதன்படி, புரட்டாசி கடைசி சனிக்கிழமையான நேற்று மாலை, 6:00 மணி முதல் ஏராளமான பக்தர்கள் வருதராஜ பெருமாளை தரிசனம் செய்ய நைனாமலைக்கு வந்தனர். தொடர்ந்து, இரவு முழுவதும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் மலை உச்சிக்கு சென்று வருதராஜ பெருமாளை தரிசனம் செய்தனர்.இதேபோல், மலை அடிவாரத்தில் உள்ள வீர ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கடந்த வாரம் பக்தர்கள், 3 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதை தடுக்கும் வகையில், நேற்று பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய, கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால், 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், 3,600 படிக்கட்டுகளில் ஏறி வருதராஜ பெருமாளை தரிசனம் செய்தனர்.