நாமக்கல் நளா ஓட்டல் ஊழியர் குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ., உதவி
நாமக்கல், இ.எஸ்.ஐ., காப்பீட்டாளர்களுக்கு, தொழில் சார்ந்த நோய் அல்லது வேலை காரணமாக இறப்பு நிகழும்போது, காப்பீட்டாளரின் ஊதியத்தில், 90 சதவீதம் சார்ந்தோர் உதவித்தொகையாக, இ.எஸ்.ஐ., கழகத்தால் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், நாமக்கல் நளா ஓட்டலில் பணிபுரிந்த இ.எஸ்.ஐ., காப்பீட்டாளர் பாபு காசிமுத்து என்பவர், கடந்த, 2024 ஜூன், 23ல் பணிக்கு செல்லும் போது சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு, சார்ந்தோர் உதவி தொகையாக மாதந்தோறும், 16,170 ரூபாய் வழங்க, சேலம் இ.எஸ்.ஐ., துணை மண்டல அலுவலகத்தின் இயக்குனர் பொறுப்பு சிவராமகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி, பாபு காசிமுத்து குடும்பத்திற்கு, நாமக்கல் இ.எஸ்.ஐ., கிளை அலுவலக மேலாளர் ஜனோவா, நளா ஓட்டல் இயக்குனர் லட்சுமி நர்மதா மற்றும் மேலாளர் ரத்ன சபாபதி ஆகியோர் தலைமையில் வழங்கப்பட்டது.