பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம் குறித்து நாளை இலவச பயிற்சி
நாமக்கல், அக். 24-'பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் குறித்து, நாளை ஒரு நாள் இலவச பயிற்சி நடக்கிறது' என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், நாளை (அக்., 25), காலை, 10:00 மணிக்கு, 'பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. பயிற்சியில், பருத்தி பயிரை தாக்கும் பூச்சிகளையும், நோய்களையும், இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், வளர்ச்சி யூக்கிகள், குறைந்த செலவில் அதிக லாபம் பெற தேவையான தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கப்படுகிறது.மேலும், ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு, பருத்தியில் முதல்நிலை செயல்விளக்க திடல்கள், 10 பேருக்கும், வயல்வெளி பரிசோதனை திடல், 5 பேருக்கும் அமைக்கப்பட உள்ளது. அடர் நடவுமுறை செய்துள்ள விவசாயிகளுக்கும், முதல்நிலை செயல்விளக்க திடல்கள் அமைத்து பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் தொழில் நுட்பங்கள் வழங்கப்படுகிறது. பருத்தி விவசாயிகள், விவசாயம் கலந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.விருப்பம் உள்ளவர்கள், 04286 -266345, 266650 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.