குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி ஜி.ஹெச்., ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா
நாமக்கல், நவ. 12-அரசு நிர்ணயம் செய்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 'கிரிஸ்டல்' என்ற தனியார் நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில், துாய்மை பணி, பாதுகாப்பு பணி, செவிலியர், மருத்துவர்களுக்கு உதவியாளர், பாதுகாவலர் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், துாய்மை பணியாளர்கள், உதவியாளர்கள் என, 231 பேர் சுழற்சி முறையில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில், தமிழகரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஊதியம், 754 ரூபாய் வழங்க வேண்டும், அனைத்து ஒப்பந்த பணியாளர்களுக்கும், ஊதியத்துடன் வார விடுமுறை, மாத ஊதியம் குறித்த விபரங்களுடன் சம்பள ரசீது வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், மருத்துவமனை நிர்வாகம், அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் காரணமாக, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், துாய்மை பணி, பாதுகாப்பு பணி பாதிக்கப்பட்டது.