அங்காளம்மன் கோவிலை நிர்வகிக்க ஹிந்து அறநிலையத்துறைக்கு உத்தரவு
புதுச்சத்திரம், புதுச்சத்திரம் அருகே, கடந்தப்பட்டியில் அங்காளம்மன் கோவில் பிரச்னையில், ஹிந்து சமய அறநிலையத்துறை, கோவிலை தற்காலிகமாக நிர்வகிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுச்சத்திரம் அடுத்த கடந்தப்பட்டியில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், கடந்த, 14 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்தது. நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு பின், மீண்டும் கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது. கோவிலை, அங்காளம்மன் அறக்கட்டளை சார்பில் பராமரித்து வருகின்றனர்.ஆனால், மற்றொரு தரப்பினர், போலி ரசீது, மாடுகளுக்கு தீவனம் வழங்கவிடாமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வந்தனர். இது தொடர்பாக வருவாய்த்துறை, போலீசார் பலமுறை சமரசம் செய்தும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. கடந்த மாதம், இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்னையில், கோவிலை பூட்டும் நிலைக்கு சென்றது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இறுதி தீர்ப்பு வரும் வரை, ஹிந்து சமய அறநிலையத்துறையினர், கோவிலை தற்காலிகமாக நிர்வகிக்க வேண்டும் என, உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று முதல் அங்காளம்மன் கோவிலை, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் பராமரிக்க தொடங்கினர்.