பழங்குடியின மக்கள் அரசியலுக்கு வருவது மிகவும் கடினம்: அமைச்சர்
ராசிபுரம்: ''அரசியல் என்பது கடினமான விஷயம். அதிலும் பழங்குடியின மக்கள் போராடி அரசியலுக்கு வருவது என்பது மிகவும் கடினம். அந்த வேதனை எனக்கு நன்கு தெரியும்,'' என, அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில், நேற்று, 'அரசியல் அதிகாரத்தில் பழங்குடிகள்?' என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடந்தது. தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:நான், அமைச்சராக இங்கு நிற்பதற்கு பழங்குடியின மக்கள் தான் காரணம். பழங்குடியின மக்கள் ஓட்டளித்து, கடைசியில் பழங்குடியின மக்கள் அமைச்சராகவே உள்ளேன். சுற்றி சுற்றி கடைசியாக பழங்குடியின மக்களுக்காகவே அமைச்சராக உள்ளேன். அரசியல் என்பது கடினமான விஷயம். அதிலும் பழங்குடியின மக்கள் போராடி அரசியலுக்கு வருவது என்பது மிகவும் கடினம். அந்த வேதனை எனக்கு நன்கு தெரியும். தற்போது, 8 லட்சம் பழங்குடியினர் உள்ளனர். கூடிய விரைவில் கணக்கீடு செய்து, எத்தனை பழங்குடியின மக்கள் உள்ளனர் என்பதை தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். என்னால் முடிந்தவரை செய்து தருகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.