மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு ஜாலி போனிக்ஸ் பயிற்சி
நாமக்கல், மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த, நாமக்கல் லில் ஆசிரியர்களுக்கு, 'ஜாலி போனிக்ஸ்' பயிற்சி அளிக்கப்படுகிறது.நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவுப்படி, அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், ஆசிரியர்களுக்கு, 'ஜாலி போனிக்ஸ் ரெப்ரஷ்மென்ட் அண்ட் ஜாலி கிராமர்' என்ற பெயரில், மூன்று நாள் சிறப்பு பயிற்சி நாமக்கல்லில் நடக்கிறது. ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கு, செயற்கை ஒலியியல் மூலம், ஆங்கில எழுத்தறிவு கற்பிப்பதற்கு, வேடிக்கையான மற்றும் குழந்தைத்தனமான அணுகுமுறை தான், 'ஜாலி போனிக்ஸ்' பயிற்சி முறை என அழைக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் மட்டும் இருந்த இப்பயிற்சி, தற்போது, 'ஜாலி பியூச்சர்ஸ்' என்ற தனியார் அமைப்பு மூலம், முதல் முறையாக அரசு பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, ஒன்று முதல், 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும், ஆசிரியர்களுக்கு, இரண்டு கட்டமாக, 'ஜாலி போனிக்ஸ் மற்றும் ஜாலி கிராமர்' பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம், தமிழ் வழி பயிலும், அரசு பள்ளி குழந்தைகள், ஆங்கில எழுத்துகளில் உச்சரிப்பை எளிமையாக கற்க முடியும். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில், ஆங்கில கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக, 'ஜாலி போனிக்ஸ் ரெப்ரஷ்மென்ட் அண்ட் ஜாலி கிராமர்' என்ற பெயரில், ஆங்கில கற்பித்தலை வலுப்படுத்த, மாவட்டத்தில், 75 ஆசிரியர்களுக்கான, மூன்று நாள் பயிற்சி, மாவட்ட திடட அலுவலகத்தில், இன்று முடிவடைகிறது.இதில், மாவட்ட அளவில் மாநில கருத்தாளர் கன்னிகா, மாவட்ட உதவி திட்ட அலுவலர் அருள்தாஸ் பயிற்சியை துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.