பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம் பெற்று கைதான நாமக்கல் சர்வேயர், வி.ஏ.ஓ., அதிரடி சஸ்பெண்ட்
நாமக்கல்: பட்டா வழங்க, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட நாமக்கல் சர்வேயர் அசோக்குமார், வி.ஏ.ஓ., வேலுசாமி ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.நாமக்கல் அடுத்த எர்ணாபுரத்தை சேர்ந்தவர் திருமுருகன், 35. இவர், தன் மாமியார், மனைவிக்கு தானமாக கொடுத்த நிலத்தை அளவீடு செய்து, தனிபட்டா வழங்க, இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பம், நிலஅளவையர் அசோக்குமார், 33, அணியார் வி.ஏ.ஓ., வேலுசாமி, 56, ஆகியோருக்கு ஆன்லைனில் அனுப்பி வைக்கப்பட்டது.அந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட, நிலஅளவையர் அசோக்குமார் நில அளவை செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார். லஞ்சம் தர மனம் இல்லாத திருமுருகன், இது குறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.அதை தொடர்ந்து, எர்ணாபுரத்தில் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, திருமுருகன், வி.ஏ.ஓ., வேலுசாமியிடம், 5,000 ரூபாய் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.அப்போது, நில அளவையர் அசோக்குமார் சொன்னதால், தான் நான் வாங்கினேன் என, வேலுசாமி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து, நாமக்கல்லில் உள்ள அலுவலகத்தில் வைத்து நிலஅளவையர் அசோக்குமாரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரையும், நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி விஜயகுமார், அவர்கள் இருவரையும், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.அதையடுத்து, அவர்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட சர்வேயர் அசோக்குமார், வி.ஏ.ஓ., வேலுசாமி ஆகியோர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார், அரசு அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர்.அவர்களின் பரிந்துரையை ஏற்று, நிலஅளவையர் அசோக்குமாரை, நிலஅளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குனர் ஜெயச்சந்திரனும், வி.ஏ.ஓ., வேலுச்சாமியை, நாமக்கல் ஆர்.டி.ஓ., பார்த்தீபனும், நேற்று 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டனர்.