ரிக் வண்டி தீ விபத்தில் சேதம் ரூ.26.33 லட்சம் வழங்க உத்தரவு
நாமக்கல், நாமக்கல், வேலகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் தேவராஜ்; இவருக்கு சொந்தமான ரிக் வாகனம், 2024 மார்ச்சில், கர்நாடக மாநிலத்தில், ஆழ்துளை குழாய் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி வண்டியின் விலை உயர்ந்த உதிரி பாகங்கள் சேதமடைந்தன. இதையடுத்து, தேவராஜ் வாகனத்திற்கு காப்பீடு செய்திருந்த தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்தார்.ஆனால், காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு கொடுக்க மறுத்து விட்டது. இதையடுத்து தேவராஜ்,, வக்கீல் பாலாஜி மூலம் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில், 2024 ஜூலையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கணேஷ்ராம், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர், காப்பீட்டு நிறுவனம் தேவராஜூக்கு இழப்பீடாக, 26 லட்சம் ரூபாய், மன உளச்சலுக்கு, 5,000 ரூபாய், வழக்கு செலவு, 3,000 ரூபாய் என, மொத்தம், 26 லட்சத்து, 33,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டனர்.