ஆன்லைன் அபராதம் தவிர்க்க கவர்னரிடம் மனு
நாமக்கல்:'கேரளாவில், தமிழக லாரிகளுக்கு ஆன்லைனில் அபராதம் விதிப்பதை தடை செய்ய வேண்டும்' என, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், அம்மாநில கவர்னரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மத்திய அரசின், சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை சார்பில், லோக்சபா நிலைக்குழு கூட்டம், நேற்று முன்தினம் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடந்தது. நாமக்கல் லோக்சபா தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்.பி., மாதேஸ்வரன் கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு, கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.மனுவில் கூறியிருப்பதாவது:நாமக்கல்லில் இருந்து கேரளாவிற்கு முட்டை ஏற்றிச்செல்லும் லாரிகளை, கேரள மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உரிய ஆவணங்கள் இருந்தும் வழக்குப்பதிவு செய்து தொல்லை செய்கின்றனர். இதை கைவிட வேண்டும். மேலும், கேரள மருத்துவ கழிவுகளை, தமிழக எல்லையோர மாவட்டங்களில் கொட்டுவதை தடை செய்ய வேண்டும்.கேரள மாநிலத்தில் ஓடிக் கொண்டிருக்கும் தமிழக காஸ் டேங்கர் லாரிகளுக்கு, போலீசார் ஆன்லைனில் அபராதம் விதிக்கின்றனர். அதில் தவறு நடக்கிறது. அபராதம் விதிக்கும் போது, சம்பந்தப்பட்ட லாரி டிரைவர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். கேரள மாநிலத்தில் வசிக்கும், கொங்கு வேளாளர் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.