14ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல், 'நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், வரும், 14ல், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது' என, கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும், நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும், 14 காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. தனியார் துறை நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான நபர்களை, அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேனேஜர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், அக்கவுன்டன்ட், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்ட் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் 2, டிப்ளமோ, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பயிற்சி மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த ஆண், பெண்கள் மற்றும் அனைத்துவித கல்வித்தகுதி உள்ளோரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அனைவரும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.