வங்கி இணைப்பு, தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட கோரி தீர்மானம்
நாமக்கல்: 'வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும்' என, மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில், மூன்றாவது மாவட்ட மாநாடு, நாமக்கல்லில் நேற்று நடந்தது. சங்க தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வைரப்பன், மத்திய குழு உறுப்பினர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் அருணாசலம், மாநாட்டை துவக்கி வைத்தார். ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் சிறப்பாளராக பங்கேற்றார். மாநாட்டில், வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும். அனைத்து தனியார் வங்கிகளும், கிராம வங்கிகளும், தேசிய மயமாக்கப்பட்டு வங்கி சேவை அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும்.கடன் வசூல் தீர்ப்பாயங்கள் துவக்கப்பட்டாலும், வசூலில் தொய்வு ஏற்படுகிறது. இவற்றை களைந்திடும் வகையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கடனை செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.தற்போது, இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து, வேலையில்லா திண்டாட்டம் பெருகியுள்ளது. 'அவுட்சோர்சிங்' முறையை நிறுத்தி, அதன் மூலம் இளைஞர்கள் நிரந்தர வேலைவாய்ப்பை பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.