பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற இளம் சாதனையாளர்களுக்கு அழைப்பு
நாமக்கல் :நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. 2025--26ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம், 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். செப்., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இத்திட்டத்தின் கீழ், கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) சென்று, 2026ம் ஆண்டிற்கான விண்ணப்பத்தை புதுப்பித்தல் செய்து கொள்ளலாம். புதிதாக விண்ணப்பிக்க விரும்பும், 9 மற்றும், 11ம் வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் தங்களது கைப்பேசி எண், ஆதார் விபரங்களை உள்ளீடு செய்வதுடன் உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.