இளைஞர்கள் பைக் சாகசம் ரூ.39,000 அபராதம் விதிப்பு
ப.வேலுார், ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில், கடந்த, 24 மாலை ஆறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது டூவீலரில் சாகசத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த பயணிகள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். சாகசம் செய்யும்போது, ஒரு இளைஞர் வண்டியுடன் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், ப.வேலுார் எஸ்.ஐ., சீனிவாசன், விசாரணை நடத்தி பைக் சாகசத்தில் ஈடுபட்ட குச்சிபாளையத்தை சேர்ந்த தனசேகரன் மகன் தனுஷ், 21, அதே பகுதியை சேர்ந்த ராமன் மகன் பாலமுருகன், 21, ஆகிய இருவரையும் கைது செய்து டூவீலரை பறிமுதல் செய்தனர்.மது போதையில் இருந்தது, ஹெல்மெட் அணியாதது, வண்டிக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியது என பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவருக்கும், 39,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ப.வேலுார் பகுதிகளில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எஸ்.ஐ., சீனிவாசன் எச்சரிக்கை விடுத்தார்.