உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தடைசெய்த பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வருவதை... தவிர்க்க வேண்டும்!சூழல் பாதுகாப்புக்கு பயணிகள் ஒத்துழைக்க அறிவுரை

தடைசெய்த பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வருவதை... தவிர்க்க வேண்டும்!சூழல் பாதுகாப்புக்கு பயணிகள் ஒத்துழைக்க அறிவுரை

ஊட்டி:'ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்படுள்ளது.நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் ஒருமுறை பயன்படுத்தி துாக்கி ஏறியப்படும் 'பிளாஸ்டிக்' பொருட்களான, பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், ஸ்பூன், ஸ்ட்ரா, முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள் உள்ளிட்ட, 21 வகையான பொருட்கள் பயன்படுத்த தடை உள்ளது.தவிர, ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகள், வணிக நிறுவனங்களை உள்ளாட்சி நிர்வாகம் கண்காணித்து அபராதம் விதிக்கப்படுகிறது.தற்போது, தமிழக--கேரளா எல்லையை ஒட்டியுள்ள சோதனை சாவடிகளில், பல ஊழியர்கள், வாகன சோதனையில் ஈடுபட்டு தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள், குடிநீர் பாட்டில்களை கொண்டு வரும் சுற்றுலா பயணிகளிடம் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கின்றனர். அவர்களிடம் நீலகிரியில் 'பிளாஸ்டிக்' தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கண்காணிப்பை தீவிரப்படுத்தணும்

இந்த முயற்சியால், உள்ளூரில் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில் பயன்பாடு அடியோடு குறைந்தது. சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினாலும், பிற மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் மறைத்து குடிநீர் பாட்டில்களை கொண்டு வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், 'ஊட்டியில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. சோதனை சாவடிகளில் வாகனங்களை தீவிரமாக சோதனையிட்ட பின் தான் அனுமதிக்க வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ''நீலகிரியில் 'பிளாஸ்டிக்' குடிநீர் பாட்டில்களுக்கு தடை உள்ளது குறித்து, அண்டை மாநிலங்களான, கர்நாடகா, கேரளா சுற்றுலா மேம்பாட்டு துறைகளுக்கு, சுற்றறிக்கை அனுப்ப, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ''அப்போது, சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதே வேளையில், சுற்றுலா தலங்களில் உள்ள வாட்டர் ஏ.டி.எம்., களில் தேவைக்கேற்ப தண்ணீர் நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

எப்படி வந்தது?

ஊட்டியில் சமீபத்தில், என்.சி.எம்.எஸ்., வளாக 'பார்க்கிங்' தளத்துக்கு வந்த சுற்றுலா பஸ்சில், பெட்டி, பெட்டியாக குடிநீர் பாட்டில்களை பஸ்சிலிருந்து சுற்றுலா பயணிகள் இறக்கி தங்கும் விடுதிக்கு எடுத்து சென்றனர். சில பஸ்களில் உள்ளூர் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் பாட்டில்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். சோதனை சாவடியில் பணிகளை தீவிரப்படுத்தினால், இவ்வாறான விதிமீறல்கள் நடக்க வாய்ப்பில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்