சிறுத்தைகள் நடமாட்ட பகுதியில் பரவும் வனத்தீ
குன்னுார் : குன்னுார் பேரட்டி கிராமம் கம்பிசோலை அருகே, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ள இடத்தில் வனத்தீ ஏற்பட்டுள்ளது.குன்னுார் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், ஆங்காங்கே வனத்தீ ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தேயிலை தோட்டங்கள் அருகே உள்ள பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ய காய்ந்த செடிகளுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் தீ வைக்கின்றனர். வனத்தீ பரவி, அருகில் உள்ள மரங்கள், அரிய வகை மூலிகைகள் எரிந்து சேதமாகி வருகின்றன.இந்நிலையில், குன்னுார் பேரட்டி அருகே கம்பிசோலை தேயிலை தோட்டம் அருகே வைத்த தீ பரவி அருகில் உள்ள வனப்பகுதிகளுக்கு பரவியது. தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர், கட்டபெட்டு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'இங்கு சமீபத்தில், 3 குட்டிகளுடன் சிறுத்தை இறந்துள்ளதை, இப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனால், இங்குள்ள வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலை உள்ளது. தற்போது, இங்கு வனத்தீ பரவ காரணமாக இருக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.