ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊட்டி கல்வி அதிகாரி சிக்கினார் வீடு, அலுவலகத்தில் விடிய விடிய சோதனை
ஊட்டி:நிலுவை தொகைக்காக ஆசிரியரிடம், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம், குன்னுாரை சேர்ந்தவர் ஜான் சிபு மானிக். இவர் 2018- முதல் குன்னுார் பார்க்சைட் சி.எஸ்.ஐ., அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணி யாற்றி வந்தார். பள்ளி நிர்வாகம் இவரை பணி நிரந்தரம் செய்ய கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியது. பள்ளிக்கல்வித் துறை இவரை பணி நிரந்தரம் செய்ய மறுத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, பணி நிரந்தரத்திற்கான ஆணையை பெற்றார். நிலுவைத்தொகை, 20 லட்சம் ரூபாயை ஜான் சிபு மானிக்கு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. ஆனாலும், இவருக்கு பணி நிரந்தர உத்தரவு, நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.மீண்டும் இந்த உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி, ஐகோர்ட்டில் ஜான் சிபு மானிக் மனு தாக்கல் செய்தார். உடனடியாக அவருக்கு நிலுவைத் தொகை வழங்கி, பணி நிரந்தரம் செய்ய கோர்ட் உத்தரவிட்டது.பணி ஆணை மற்றும் நிலுவைத்தொகை பெறுவதற்கான உத்தரவை வழங்க வலியுறுத்தி, ஜான் சிபு மானிக் நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷை அணுகினார். நிலுவைத்தொகை வழங்க, 5 லட்சம் ரூபாயை சந்தோஷ் லஞ்சமாக கேட்டுள்ளார். பேச்சு நடத்தி, 2 லட்சம் ரூபாய் தர முடிவானது. கொடுக்க விருப்பமில்லாத ஜான் சிபு மானிக், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.போலீசார் ரசாயனம் தடவிய, 2 லட்சம் ரூபாயை ஜான் சிபு மானிக்கிடம் கொடுத்தனர். நேற்று முன்தினம் மாலை, ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் வசித்து வந்த சந்தோஷ் வீட்டிற்கு சென்று, ஜான் சிபு மானிக் லஞ்சம் கொடுத்தார்.அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு தலைமையிலான போலீசார், அவரை சுற்றிவளைத்தனர். அவரது வீடு, அலுவலகத்தில் விடிய விடிய சோதனை மேற்கொண்ட போலீசார், நேற்று அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஊட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.