குடியிருப்பு அருகே 12 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனத்தில் விடுவிப்பு
கூடலுார், : கூடலுார் அல்லுார் அருகே, 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு வனத்தில் விடுவித்தனர்.கூடலுார் தொரப்பள்ளி அருகே உள்ள, அல்லுார் வயல் பகுதி சாலையோரத்தில் வளர்ந்துள்ள செடிகளை சுத்தம் செய்யும் பணியில் அப்பகுதி மக்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் ஒட்டிய பகுதியில், மலைப்பாம்பு இருப்பதை பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வன அதிகாரிகள் உத்தரவுப்படி, அதிவிரைவு படை காவலர் கோவிந்தராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அப்பகுதிக்கு சென்று, கிராம மக்கள் உதவியுடன் மலைப்பாம்பை பாதுகாப்பாக மீட்டு, முதுமலை வனப்பகுதியில் விடுவித்தனர். இப்பகுதியில், ஏற்கனவே, பல மலைப்பாம்புகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவித்துள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'உள்ளூர் பகுதியில் சாலையோரம் இருந்த, 12 அடி நீளம் மலைப்பாம்பை வன ஊழியர்கள் அப்பகுதி மக்கள் உதவியுடன், மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர். இதனால், யாருக்கும் எந்த ஆபத்து ஏற்படவில்லை,' என்றனர்.