வயநாடு வனத்தில் உலா வரும் மாற்றுத்திறன் யானை
பந்தலுார்; 'கேரளா மாநிலம் வயநாடு சாலை, வனப்பகுதியில், முன்பக்க கால் பாதிக்கப்பட்ட நிலையில் மாற்றுத்திறன் யானை உலா வருவதால், இரு மாநில வாகன ஓட்டுனர்கள் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பகுதி கர்நாடகா மாநிலம் பந்திப்பூர், தமிழகத்தின் முதுமலை வனப்பகுதிகளை ஒட்டி அமைந்து உள்ளது. வனப்பகுதி வழியாக கர்நாடகா மாநிலம் செல்லும் சாலை அமைந்து உள்ளது. இந்த சாலையை ஒட்டிய வனப்பகுதியில், முன் கால் பாதிக்கப்பட்ட நிலையில் யானை ஒன்று கூட்டத்துடன் உலா வருகிறது.வனத்துறையினர் கூறுகையில், 'இந்த யானை பிறவியிலேயே, கால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறன் யானையாக உள்ளது. இந்த யானையை பிற யானைகள் அரவணைத்து அழைத்துச் செல்வது வழக்கம். சாலையை யானை மெதுவாகவே கடக்கும் என்பதால், சாலையில் செல்லும் போது, வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை மித வேகத்தில் இயக்க வேண்டியது அவசியமாகும்,' என்றனர்.