குடும்ப பிரச்னைக்கு தீர்வு காண பஸ் முன் படுத்த நபரால் பரபரப்பு
பந்தலுார்: பந்தலூரில் குடும்ப பிரச்னைக்காக சாலையில், பஸ்சின் முன்பாக படுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பந்தலுார் அருகே அத்திக்குன்னா பகுதியை சேர்ந்தவர் சிவா. இவருக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தங்கள் குடும்ப பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி நேற்று மதியம், பந்தலுார் பஜாரில் சாலையின் நடுவில், பஸ்சின் முன்பாக படுத்தார். அருகில் இருந்தவர்கள், அவரை சமாதானப்படுத்தி சாலை ஓரம் கொண்டு போய் விட்டபோதும் திரும்பத் திரும்ப, சாலையின் நடுவில் படுத்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல், திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து, அவரை தூக்கிச் சென்று சமாதானப்படுத்தி, உறவினர்களை வரவழைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.