கல்வியில் கவனம் எதிர்காலத்தில் வளர்ச்சி:பள்ளி நிகழ்ச்சியில் அறிவுரை
பந்தலூர்:பழங்குடியின மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தினால் மட்டுமே, எதிர்காலத்தில் வளர்ச்சி காண முடியும். என, அறிவுறுத்தப்பட்டது.பந்தலூர் அருகே, அம்பலமூலா பகுதியில் செயல்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிட பள்ளியில், பழங்குடியினர் தின விழா நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு தலைமை வகித்து பேசுகையில், ''பள்ளி இடை நின்ற பழங்குடியின மாணவர்களை, தேடிப்பிடித்து அவர்கள் கல்வி, விளையாட்டில் மேம்பட, இந்தப் பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது. பழங்குடியின பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தொடர்ந்து உயர்கல்வி படிக்க வைத்தால் மட்டுமே, சமுதாயம் வளர்ச்சிக்கான முடியும்.'' என்றார்.பிரபஞ்ச அமைதி அறக்கட்டளை நிறுவன குருஜி சிவாத்மா பேசுகையில், '' பழங்குடியின மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் எனும் நோக்கில், அரசு கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதற்கு பெற்றோர்களும் துணை நின்றால் மட்டுமே, குழந்தைகளை நல்ல நிலையில் படிக்க வைத்து உயர்வான இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.'' என்றார். மாவட்ட திட்ட அலுவலர் மூர்த்தி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன், காட்டு நாயக்கர் சமுதாய செயலாளர் சந்திரன், பணியர் சமுதாய மாவட்ட தலைவர் பெள்ளன் உள்ளிட்டோர் பேசினார்கள். அறக்கட்டளை சார்பில் பழங்குடியின மக்களுக்கு பரிசு பெட்டகம் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.