வன உரிமை சட்டத்தில் நிலம் வழங்க வேண்டும்: பழங்குடியினர் கலெக்டரிடம் மனு
ஊட்டி ; 'நீலகிரியில் வசிக்கும் பழங்குடியினருக்கு வன உரிமை சட்டத்தின் கீழ் நிலம் வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் பண்டைய பழங்குடியின தலைவர் ஆல்வாஸ் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:ஊட்டி தாலுகாவுக்கு உட்பட்ட சோலுார் பகுதியில் தோடர் மற்றும் கோத்தர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த பகுதிகளில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், 'வன உரிமை சட்டத்தின் கீழ் நிலம் ஒதுக்க வேண்டும்,' என கோரி மனு அளித்துள்ளனர். சோலுார் பகுதியில் மேய்ச்சல் நிலங்களில் விவசாயம் செய்து வருபவர்கள் மீது வனத்துறையினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். 'இவர்களை ஆக்கிரமிப்பாளர்கள்,' என, அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. பழங்குடியின மக்களின் சார்பில் பழங்குடியின நலத்துறை அதிகாரிகள் இந்த வழக்கில் ஆஜராகி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களின் பிரச்னைகளை எடுத்துக் கூற வேண்டும். மாவட்ட நிர்வாகம் வன உரிமை சட்டத்தின் கீழ், எங்களுக்கு சேர வேண்டிய நிலங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.