உபதலை கரோலினாவில் மீண்டும் மண்சரிவு: சாலை துண்டிப்பால் பாதிப்பு சாலை துண்டிப்பால் பாதிப்பு
குன்னுார்; குன்னுார் உபதலை ஊராட்சி கரோலினா சாலையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் சாலை பாதியளவு துண்டிக்கப்பட்டது. குன்னுார் உபதலை ஊராட்சி, 5வது வார்டு கரோலினா மற்றும் புது காலனி பகுதிகளில் நுாற்றுகணக்கான குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியளவில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும், சாலை துண்டிக்கப்படும் அபாயம் இருந்ததால், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சில மாதங்களுக்கு பிறகு, 14 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் துவங்கியது. எனினும், பணிகள் மந்தகதியில் நடந்து வந்தன.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை பெய்த கன மழையால் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு சாலையின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டது.இதனால், கிராம மக்கள் வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடந்து செல்லும் மக்களும் மாற்றுவழியாக நடந்து செல்கின்றனர். எனவே, பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.