முதுமலையில் காட்டு யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் காயம்
கூடலுார்; முதுமலை, தெப்பக்காடு வனப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வேட்டை தடுப்பு காவலர் யானை தாக்கி காயமடைந்தார்.முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனச்சரகம், கஞ்சிக்கட்டி வேட்டை தடுப்பு முகாம் ஒட்டிய வனப்பகுதியில், நான்கு வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட ஐந்து பேர், நேற்று, காலை 11:00 மணிக்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, திடீரென காட்டு யானை ஒன்று அவர்களை நோக்கி வந்தது. அதனிடமிருந்து தப்பிக்க அனைவரும் ஓடினர். அதில், வேட்டை தடுப்பு காவலர் பொம்மன், 24, என்பவரை காட்டு யானை தாக்கியது. மற்றவர்கள் சப்தமிட்டு யானையை விரட்டி அவரை காப்பாற்றினர்.யானை தாக்கியதில் காலில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் வேட்டை தடுப்பு காவலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.