கொய்மலர்களில் அமைக்கப்படும் பொன்னியின் செல்வன் கோட்டை ஊட்டி மலர் கண்காட்சியை அமர்க்களப்படுத்த ஏற்பாடு
ஊட்டி; ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கொய் மலர்களை கொண்டு பொன்னியின் செல்வன் கோட்டை, அன்னபறவை படகு மற்றும் அரியாசனம் ஆகியவைகள் அமைக்கப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்திற்கு கோடை விழாவின் போது. பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஆண்டுதோறும் அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.நடப்பாண்டின் கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்கா முழுவதிலும், 5 லட்சத்திற்கு மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது. 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.இந்நிலையில், தாவரவியல் பூங்காவில், 127 வது மலர் கண்காட்சி நாளை துவங்கி, 11 நாட்கள் நடக்கிறது. மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதனை முன்னிட்டு தற்போது பூங்காவை, மலர் அலங்காரங்களால் பொலிவுப்படுத்தும் பணிகள் துரித கதியில் வருகிறது.அதில், இம்முறை பல லட்சம் கொய்மலர்கள் மற்றும் ரோஜா மலர்களை கொண்டு பொன்னியின் செல்வன் கோட்டை அமைக்கப்பட்டு வருகிறது. அதில், அன்னப்பறவை படகு, அரியாசனம் ஆகியவை உட்பட பல்வேறு அலங்காரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாடங்களில், பல்லாயிரம் மலர் தொட்டிகளை சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது.