அரசு பள்ளிக்கு விசிட் செய்த குட்டியானை
பந்தலுார்: கேரள மாநிலம் வயநாடு சேகாடி என்ற இடத்தில் அரசு பள்ளிக்கு, குட்டி யானை 'விசிட்' செய்ததால் மாணவர்கள் அச்சமடைந்தனர். கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் புல்பள்ளியிலிருந்து -பாவலி செல்லும் சாலையில் சேகாடி கிராமம் அமைந்துள்ளது. வனத்திற்கு மத்தியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், பழங்குடியின மக்கள் அதிக அளவில் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில் யானைகள் அடிக்கடி வந்து செல்லும் நிலையில், நேற்று மதியம் பள்ளி வளாகத்தில் குட்டி யானை ஒன்று வகுப்பறைக்கு அருகே வந்துள்ளது. இதனை பார்த்த ஆசிரியர்கள் மாணவர்களை, வகுப்பறைக்குள் வைத்து பூட்டினர். இதுகுறித்து, வயநாடு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனக்குழுவினர் பள்ளி வளாகத்திற்கு வந்து, ஒரு வயதுடைய யானை குட்டியை வலை வைத்து பிடித்து அருகில் உள்ள வனப்பகுதிக்கு தாயிடம் சேர்க்க துாக்கி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.