காட்டு யானையால் வாழை மரங்கள் சேதம்
கூடலுார்: கூடலுார் தொரப்பள்ளி, அல்லுார்வயல் பகுதியில்,வாழை மரங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கூடலுார் தொரப்பள்ளி, அல்லுார்வயல், கோடமூலா, குணில் பகுதிகள் முதுமலை புலிகள் காப்பக எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. இரவில் காட்டு யானைகள் அகழியை கடந்து, விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம், நள்ளிரவு அல்லுார் பகுதியில் சுந்தரம் என்பவரின் விவசாய தோட்டத்தில் நுழைந்த யானை, 400க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மிதித்து சேதம் செய்து சென்றுள்ளது. விவாசயிகள் கூறுகையில், 'இங்கு யானையால் சேதமான நேந்திரன் வாழை மரங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்குவதுடன், பிரச்னைக்கு நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.