கூண்டில் சிக்கிய கரடி; முதுமலையில் விடுவிப்பு
ஊட்டி; ஊட்டி நகரில் கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. ஊட்டியில் கடந்த இரண்டு வாரமாக கரடி ஒன்று உலா வந்தது. குடியிருப்பு பகுதிகள் மற்றும் விடுதிகளுக்குள் கரடி சுற்றி திரிந்தது. பொது மக்களை அச்சமடைய செய்து வந்தது. தாவரவியல் பூங்கா பகுதிக்கு வந்து தனியார் ஓட்டல் பகுதிகளிலும் சுற்றித்திரிந்தது. 'கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என, மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஊட்டி வடக்கு வனச்சரகர் ராம்பிரகாஷ் தலைமையிலான வனத்துறை குழுவினர் கரடியை பிடிக்க நேற்று முன்தினம் மாலை ஆரம்பி பகுதிக்கு அருகில் உள்ள, ஊட்டி கிளப் அருகே கூண்டு வைத்தனர். கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க டாக்டரும் தயாராக இருந்தார். கூண்டு வைத்த சில மணி நேரத்தில் அந்த கூண்டில் கரடி சிக்கியது. கரடியை உடனடியாக வனத்துறையினர் கொண்டு சென்று முதுமலையில் உள்ள அடர்ந்த வன பகுதிக்குள் விடுவித்தனர். ஊட்டி மக்கள் நிம்மதி அடைந்தனர்.