பள்ளி சமையல் அறை கதவை ஆறு முறை உடைத்த கரடிகள்; உணவுப் பொருட்கள் சேதம்
கோத்தகிரி; கோத்தகிரி அருகே, பள்ளி சமையல் அறையை உடைத்த கரடிகள், உணவு பொருட்களை சேதப் படுத்தின.கோத்தகிரி அரவேனு பெரியார் நகர் பகுதியில், தின்னியூர் அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி சத்துணவு கூட சமையல் அறை கதவை, ஆறு முறை உடைத்த கரடிகள் உணவுப் பொருட்களை சேதம் படுத்தியுள்ளன. இந்நிலையில், நேற்று இரவு கதவை உடைத்து, பருப்பு, அரசி மற்றும் சமையல் எண்ணெயை மீண்டும் சேதம் படுத்தியுள்ளன.இது குறித்து, பள்ளி நிர்வாகம் சார்பில், வனத்துறை மற்றும் வட்டார கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கரடி நடமாட்டம் கட்டுப்படுத்தப்படவில்லை.இதனால், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சம் அடைந்துள்ளனர். எனவே, பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, கரடிகளை கூண்டு வைத்து பிடிப்பதுடன், பள்ளியை சுற்றிலும் கம்பி வேலி அமைக்க வேண்டும்.