உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளிகள் அருகே மதுக்கடை கொண்டுவர முயற்சி; பா.ஜ., இந்து முன்னணி எதிர்ப்பு

பள்ளிகள் அருகே மதுக்கடை கொண்டுவர முயற்சி; பா.ஜ., இந்து முன்னணி எதிர்ப்பு

குன்னுார்; குன்னுார் மவுண்ட் ரோட்டில், பள்ளிகள் அருகே புதிய டாஸ்மாக் கடை மற்றும் பார் கொண்டு வருவதை தடுக்க பா.ஜ., இந்து முன்னணி மற்றும் மகளிர் பள்ளி நிர்வாகம் சார்பில் கலெக்டருக்கு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன. குன்னுார் மவுண்ட் ரோடு ரேலி காம்பவுண்ட் அருகே ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இங்கு ஜோசப் கான்வென்ட், ஸ்டேன்ஸ் பள்ளி, ரேஷன் கடை, வழிபாட்டு ஸ்தலங்கள் உள்ளன. ஏற்கனவே நகராட்சி அலுவலகம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், இதே சாலையில் பள்ளிகள் அருகே ஜெயக்குமார் என்பவரின் கட்டடத்தில் புதிய மதுபான டாஸ்மாக் கடை மற்றும் பார் கொண்டு வர ஏற்பாடுகள் நடந்தது. 'இங்கு டாஸ்மாக் மதுக்கடையை கொண்டு வர கூடாது,' என, வலியுறுத்தி, பா.ஜ., மாவட்ட தலைவர் தர்மன், துணைத் தலைவர் ஈஸ்வரன், செயலாளர் சரவணன்; இந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி, செயலாளர் சீனிவாசன் ஆகியோர், ஊட்டியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்,மாவட்ட வருவாய் அலுவலரிடம் தனிதனியாக புகார் மனுக்கள் வழங்கினர். இதேபோல, ஜோசப் கான்வென்ட் பள்ளி தலைமை ஆசிரியை அலெக்ஸ் ராணி மற்றும் ரேலி காம்பவுண்ட் குடியிருப்பு வாசிகள் மாவட்ட கலெக்டருக்கு மனுக்கள் அனுப்பி உள்ளனர். பா.ஜ., துணைத் தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், ''பள்ளிகளின் அருகிலேயே ஐகோர்ட் உத்தரவை மீறி, டாஸ்மாக் மதுக்கடையை கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீர்வு காணாவிட்டால், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர், என்.ஓ.சி., சான்றிதழை திரும்ப பெற டாஸ்மாக் மேலாளரிடம் மனு கொடுத்துள்ளார்,' 'என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ