பஸ் மோதி விபத்து: பள்ளி மாணவி பலி
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொழிஞ்சாம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஷபீரலி. இவரது மகள் நபீசத்துமிஸ்ரியா, 7. இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை நபீசத்துமிஸ்ரியாவை, அவரது தந்தை பள்ளிக்கு ஸ்கூட்டரில் அழைத்து சென்றார். கொழிஞ்சாம்பாறை அருகே, -பொள்ளாச்சி சாலையில் சென்ற போது, அத்திக்கோடு பகுதியில், முன்னாள் சென்ற ஆட்டோவை திடீரென நிறுத்தியதால், ஆட்டோவில் ஸ்கூட்டர் மோதியது. இதில், சாலையின் இடது பக்கமாக ஷபீரலியும், வலது பக்கம் நபீசத்துமிஸ்ரியா விழுந்தனர். அப்போது அதிவேகமாக வந்த பஸ் நபீசத்துமிஸ்ரியா மீது ஏறியது. இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். ஷபீரலி சிறு காயங்களுடன் தப்பினர். தகவல் அறிந்து வந்த கொழிஞ்சாம்பாறை போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதை கண்டித்து, மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்திய பின், மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.