காலின் மீது ஏறிய பஸ் தொழிலாளி படுகாயம்
கோத்தகிரி; கோத்தகிரி அருகே, பஸ் சக்கரத்தில் சிக்கி, தொழிலாளி படுகாயம் அடைந்தார்.கோத்தகிரி தவிட்டுமேடு பெரியார் நகரை சேர்ந்த நேசமணி, 40. கூலிதொழிலாளியான இவர், நேற்று தனது வீட்டிற்கு செல்வதற்காக, கோத்தகிரியில் இருந்து, திருப்பூருக்கு சென்ற அரசு பஸ்சில் பயணித்துள்ளார்.குறிப்பிட்ட பஸ் நிறுத்தத்தில் கண்டக்டர் பஸ்சை நிறுத்தி, பயணிகளை இறக்கியுள்ளார். ஆனால், நேசமணி இறங்காமல் இருந்து விட்டு, பஸ் புறப்பட்டப்பின் இறங்கியுள்ளார். அப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், பஸ் சக்கரம் நேசமணியின் இடது காலில் ஏறியதில் படுகாயம் அடைந்தார். கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.