மலை பாதை பள்ளத்தில் கவிழந்த கார் : நால்வர் காயம்
குன்னுார்; குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் நால்வர் காயமடைந்தனர்.மஞ்சூர் அருகே இத்தலார் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 56, இவர் குடும்பத்தினருடன் கோவைக்கு சென்று, நேற்று முன்தினம் இரவு குன்னுார் பர்லியார் வழியாக, காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது காட்டேரி லாஸ் நீர்வீழ்ச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றோர, பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.அவ்வழியாக வந்தவர்கள் உடனடியாக தகவல் அளித்ததன் பேரில், ரோந்து போலீசார் மற்றும் பொதுமக்கள், தீயணைப்பு துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு, 108 சேவை ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அதில், பாலகிருஷ்ணன், விஜயா,57, தீபேஷ்,13, ஆகியோர் லேசான காயமடைந்து குன்னுார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தலையில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணனின் மனைவி ராஜலட்சுமி, 47, சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.