மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம்
05-Dec-2024
குன்னுார் ; ''மண்ணில் ரசாயன உரங்கள் கொட்டுவதால், உணவு பொருளில் ரசாயன மூலக்கூறுகள் பெருகி, வருங்கால சந்ததியினருக்கு நல்ல உணவு கிடைப்பதில் பெரும் பிரச்னை ஏற்படும்,'' என, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.குன்னுார், உபதலை அரசு மேல்நிலை பள்ளியில், நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்து வருகிறது. அதில், உலக மண் தினத்தையொட்டி, 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாணவர்கள் நடவு செய்தனர்.தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர் ஐரின் ஜெரி, தலைமையில், மண்வள பாதுகாப்பு கருத்தரங்கு நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜு பேசியதாவது:மண் வளம் காப்பது மற்றும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், டிச.5ல் உலகம் முழுவதும் மண்தினம் கொண்டாடப்படுகிறது. மனித குலம் மற்றும் உணவிற்கு மண் ஆதாரமாக உள்ளது. 90 சதவீத உணவு பொருள் மண்ணில் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாய நிலத்தின் ஒரு அங்குல உயரமுள்ள மேல்மண் உருவாக ஆயிரம் ஆண்டுகளாகும். மண், உயிர் உள்ள ஜீவன்; மண்புழு போன்ற பல புழு, பூச்சிகள் நிலத்தை வளப்படுத்துகின்றன. உணவு உற்பத்தி பெருக்க ஏராளமான ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள், நிலத்தில் கொட்டியதால் மண் மலட்டு தன்மைக்கு மாறியுள்ளது. உலகில் பெரும்பாலான விளை நிலங்கள் உற்பத்தி திறனை அதிகம் இழந்துள்ளது.மண்ணில் ரசாயன உரங்கள் கொட்டுவதால், உணவு பொருளில், ரசாயன மூலக்கூறுகள் பெருகி உணவு நஞ்சாகியுள்ளது. இது தொடர்ந்தால், வருங்கால சந்ததியினருக்கு நல்ல உணவு கிடைப்பதில் பெரும் பிரச்னை ஏற்படும். மண் வளம் காக்க, ரசாயன உரங்கள் தவிர்த்து, மாட்டு சானம் போன்ற இயற்கை உரங்கள் பயன்படுத்த வேண்டும். சுனாமியில், மலேசியா போன்ற நாடுகளில், விவசாய நிலத்தின் மீது உப்புநீர் படிந்து மண்வளம் சேதமடைந்தது. அதனை பஞ்சகாவியம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி மீட்டெடுத்த பெருமை இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வரை சாரும். இவரின் அறிவு களஞ்சியத்தை பயன்படுத்தி மண்வளம் காக்க முன்வர வேண்டும். மண் வளம் காப்பது மனித வாழ்க்கையை காப்பதற்கு ஒப்பானது. இவ்வாறு ராஜு பேசினார். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாசம் வரவேற்றார். ஆசிரியர் மோகன்குமார் நன்றி கூறினார்.
05-Dec-2024