மேக மூட்டமான காலநிலை வாகனங்களை இயக்க சிரமம்
கோத்தகிரி: கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், கடுங்குளிரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வாகனங்கள் முகப்பு விளக்கு உதவியுடன் இயக்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில், புயல் சின்னம் காரணமாக, கடந்த நான்கு நாட்களாக அவ்வப்போது, சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் மழை நீடித்தது. நேற்று காலை, கடும் குளிருடன் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாவட்டத்தில் குறைந்தபட்சம், 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், கடும் குளிர் நிலவியது. இதனால், மக்கள் வெம்மை ஆடைகளை அணிந்தும், சில இடங்களில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். குறிப்பாக, கோத்தகிரி நகரம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு தொடர்ந்து, மேகமூட்டமான காலநிலை நிலவியது. அனைத்து வாகனங்கள் முகப்பு விளக்கு உதவியுடன் இயக்கப்பட்டன. போலீசார் கூறுகையில், 'வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களை மேகமூட்டம் மெதுவாக இயக்க வேண்டும்,' என, போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.