| ADDED : செப் 09, 2026 05:51 PM
குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் மழை வேண்டி கோடேரி கிராமத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு பருவமழை பொய்த்து நிலத்தடி நீர்மட்டம் மற்றும் விவசாயம் பாதித்துள்ளது. இதனால், மக்கள் குடிநீருக்கும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், மழை வேண்டி, குன்னுார் கோடேரி கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வறட்சியை போக்கி, விவசாயம் செழிக்கவும், குடிநீர் தேவைகள் பூர்த்தியாகவும் மழை வேண்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து அரங்கநாதர் கோவில், மாரியம்மன் கோவில், ஹெத்தையம்மன் கோவில் மற்றும் மகாலிங்கய்யா கோவில்களில் அடுத்தடுத்து சிறப்பு வழிபாடுகளும் தீபாராதனைகளும் நடத்தப்பட்டு கூட்டு பிரார்த்தனை நடந்தது. ஊரின் சுபிட்சத்திற்காகவும், பருவமழை தவறாது பொழிய வேண்டியும் மக்கள் அனைவரும் ஒருமனதாக பிரார்த்தனை செய்தனர். இந்நிகழ்வில், ஊர் தலைவர்கள் கோவிந்தராஜன், ராமு உட்பட கிராமத்தை சேர்ந்த பெண்கள், பெரியவர்கள் என மக்கள் பங்கேற்றனர்.