நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடை அகற்ற கமிஷனர் உத்தரவு
ஊட்டி; 'சேரிங்கிராசில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடை அகற்றப்படும்,' என, நகராட்சி கமிஷனர் தெரிவித்தார். ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு பொதுமக்களின் வசதிக்காக நகராட்சி சார்பில் நடைபாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏப்., முதல் வாரத்தில் முதல்வர் வருகை தருவதை ஒட்டி, அப்பகுதியில் சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே, மையப்பகுதியில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து இரவோடு, இரவாக கடை வைத்துள்ளனர். நேற்று காலையில் அவ்வழியாக நடந்து வந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பை பார்த்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில், ''சேரிங்கிராஸ் பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைக்க எந்த அதிகாரமும் இல்லை. ஆய்வு மேற்கொண்டு அகற்ற உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.