சேதமடைந்த சாலை: விரைவில் சீரமைத்தால் பயன்
கூடலுார்; கூடலுார் செம்பாலா அருகே சேதமடைந்த சாலையை கோடை சீசனுக்கு, முன் சீரமைக்க வலியுறுத்தி உள்ளனர்.கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து கேரளா செல்லும் கோழிக்கோடு சாலை, பிரிந்து செல்கிறது. தமிழக- கேரள -- கர்நாடகாவை இணைக்கும் இச்சாலையில், எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும்.கேரளாவில் இருந்து நீலகிரி வரும் வாகனங்களுக்கு, வருவாய் துறையினர், நாடுகாணியில் நுழைவு வரி வசூல் மையம் அமைத்து, நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இச்சாலை, கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் செம்பாலா வரை, 2 கி.மீ., ; நாடுகாணியிலிருந்து மாநில எல்லையான கீழ்நாடுகாணி வரை, 6 கி.மீ., சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. ஓட்டுநர்கள், சுற்றுலா பயணிகள் இச்சாலையில் சிரமப்பட்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர்.சேதமடைந்த சாலை யை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.இந்நிலையில், கடந்த மாதம் கீழ்நாடுகாணியில் சேதமடைந்த, 4 இடங்களில் மட்டும், இன்டர்லாக் கற்கள் பதித்து சீரமைத்தனர். சேதமடைந்த மற்ற பகுதிகள் சீரமைக்கப்படவில்லை.தற்போது பெய்து வரும் கோடை மழையில் சேதமடைந்த பகுதிகளில் மழைநீர் தேங்கி சாலை மேலும் சேதமடைந்து, வாகனங்கள் இயக்க சிரமப்பட்டு வருகின்றனர்.சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் வெளிமாநில சுற்றுலா பயணிகள், ஓட்டுநர்கள் அதிருப்தி அடைந்தனர்.சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'இச்சாலை வழியாக நீலகிரிக்கு நுழையும் வாகனங்களுக்கு தமிழக அரசு நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகிறது. எனினும், சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், சாலை சேதமடைந்து வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, கோடை சீசனுக்கு முன், சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.