சேரம்பாடியில் தலைக்கு மேல் ஆபத்து!
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், ஆபத்தை ஏற்படுத்தும் விளம்பர பலகைகளை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள, விளம்பர பலகைகளால் ஏற்படும் பாதிப்பு களை தவிர்க்கும் வகையில், விளம்பர பலகைகளை அகற்ற நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், பந்தலூர் அருகே, சேரம்பாடி பஜார் பகுதியில், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு, அவை அகற்றப்படாமல் உள்ளது. அவற்றை கட்டி வைக்கப்பட்டுள்ள கம்பங்கள், பழுதடைந்து விழும் நிலையில் உள்ளதால், விளம்பர பலகைகள் கீழே விழுந்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும். எனவே, சேரம்பாடி பஜார் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, விளம்பர பலகைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என,பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.