நகராட்சி அலுவலகம் அருகே ஆபத்தான மரம்
கோத்தகிரி,; 'கோத்தகிரி நகராட்சி அலுவலகம் எதிரே, ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி, சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மொத்தம், 21 வார்டுகளில், 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.பொதுமக்களின் தேவைகள், நகராட்சி ஊழியர்களின் வாகனங்கள், நிறுத்த அலுவலக வளாகத்தில் போதுமான இட வசதி இல்லை. இதனால், வாகனங்கள் பிரதான சாலையில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.இந்நிலையில், அலுவலகம் எதிரே, தனியார் பெண்கள் பள்ளி அமைந்துள்ளது. இடைப்பட்ட இடத்தில், அபாயகரமானநிலையில் மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் விழும்பட்சத்தில், முக்கிய பிரதான சாலையில், போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், இப்பகுதியில், நிறுத்தப்படும் வாகனங்கள் சேதம் அடைய வாய்ப்புள்ளது. எனவே, போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்.