ஊட்டிக்கு வந்த டில்லி கவர்னர்; பழங்குடி மக்களுடன் நடனம்
கூடலுார்,; டில்லி கவர்னர் வினைகுமார் சக்சேனா, நீலகிரி மாவட்டத்திற்கு தனிப்பட்ட முறையில் வந்துள்ளார். இவர், நேற்று ஊட்டி சூட்டிங் மட்டம் பகல்கோடு மந்து பகுதிக்கு சென்றார். அங்குள்ள பழங்குடியினரின் உற்பத்தி பொருட்கள் வைக்கப்பட்ட அங்காடியை பார்வையிட்டார். தோடர் பழங்குடியினருடன் நடனமாடி மகிழ்ந்தார். பின், பைக்காரா படகு இல்லத்துக்கு சென்று படகு சவாரி செய்தார்.மாலை முதுமலை புலிகள் காப்பகம் வந்த அவரை, துணை இயக்குனர் வித்யா வரவேற்றார். தொடர்ந்து, வனத்துறை வாகனத்தில் முதுமலை வனப்பகுதியில் சவாரி சென்று திரும்பி, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வந்தார். அங்கு, வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு, யானை பாமாவுக்கு கரும்பு வழங்கினார். யானைகள் பராமரிப்பு குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இரவு முதுமலையில் தங்கினார். அதிகாரிகள் கூறுகையில், 'டில்லி கவர்னர், தனிப்பட்ட முறையில் நீலகிரி மாவட்டத்துக்கு வந்துள்ளார். மற்ற விபரங்கள் எங்களுக்கு தெரியாது,' என்றனர்.