மின் வாரியத்திற்கு சொந்தமான இடங்களில்... 200 ஏக்கர் ஆக்கிரமப்பு! சமூக விரோதிகளின் கூடாரமான குடியிருப்புகள்
ஊட்டி : நீலகிரி மின்வாரியத்திற்கு சொந்தமான, 200 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயார், அப்பர் பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா,கெத்தை, பில்லுார் ஆகிய, 13 அணைகள் உள்ளன.அதில், குந்தா, பைக்காரா மின் வட்டத்தில், 6 மின் நிலையம் உள்ளன. மாவட்டத்தில் உள்ள, 12 மின் நிலையங்களில், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். 200 ஏக்கர் ஆக்கிரமிப்பு
இந்நிலையில், குந்தா, அவலாஞ்சி, எமரால்டு, மாயார், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் அணை மற்றும் மின் நிலையத்தை ஒட்டி, 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் மின்வாரியத்திற்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து, தேயிலை தோட்டம், மலை காய்கறி தோட்டங்களால் உருவாக்கப்பட்டன.பல ஆண்டு ஆக்கிரமிப்பு இடங்கள் குறித்து கடந்த ஓராண்டுக்கு முன்பு அந்தந்த பகுதி வருவாய் துறையினருடன் மின்வாரியத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, எமரால்டு, அவலாஞ்சி பகுதிகளில் பொக்லைன் உதவியுடன், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால், இடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தால், அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளன.குறிப்பாக, குந்தா மின் நிலையத்தை ஒட்டி, 30 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு தேயிலை பயிரிட்ட இடங்களில் பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அரசியல் தலையீடு காரணமாக அவைகள் அகற்றப்படவில்லை. இந்த ஆக்கிரமிப்பு நிலங்கள் மின்வாரிய பணிகளுக்கு இடையூறாகவும் உள்ளதாக, மாநில மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல்கள் சென்றுள்ளன.மின்வாரிய மேற்பார்வை செயற்பொறியாளர் முரளி கூறுகையில், ''மின்வாரிய நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக சில இடங்களில் வருவாய்த்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. பிரச்னை உள்ள இடங்கள் குறித்து மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உத்தரவு வந்த பின் அவற்றை முழுமையாக அகற்றுவது குறித்து உரிய நடவடிககை எடுக்கப்படும்,'' என்றார்
புதர் சூழ்ந்த குடியிருப்புகள்!
நீலகிரியில் உள்ள, 12 மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊழியர்கள் குடியிருக்க குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணி ஓய்வ, விருப்ப ஓய்வு, காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால், 500 குடியிருப்புகள் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. அதில், அப்பர் பவானி, அவலாஞ்சி பகுதிகள் வனம் சூழ்ந்த இடங்கள் என்பதால், புதர் சூழ்ந்த குடியிருப்புகள். சமூக விரோதிகளுக்கு கூடாரமாகவும் உள்ளது.