காலை உணவு திட்ட விரிவாக்கம்; கோத்தகிரி பள்ளியில் துவக்கம்
கோத்தகிரி; கோத்தகிரி புனித அந்தோணியார் பள்ளியில், விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதனை நீலகிரி எம்.பி., ராஜா துவக்கி வைத்து பேசியதாவது: மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதுடன், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருக்கவும், ரத்த சோகை குறைபாட்டினை நீக்கவும் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட இத்திட்டம், தற்போது, 3,415 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும், 317 பள்ளிகளில் பயிலும், 9,858 மாணவர்கள் இதனால் பயன் பெறுகின்றனர். மேலும், அரசு உதவி பெறும், 63 தொடக்க பள்ளியில் பயிலும், 2,645 மாணவர்கள் என மொத்தம், 12 ஆயிரத்து, 503 மாணவர்கள் பயனடைகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். அரசு கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.