வனத்துறைக்கு வாக்கி டாக்கி விவசாய சங்கம் வலியுறுத்தல்
ஊட்டி : நீலகிரி மாவட்ட ஆரிகவுடர் விவசாயிகள் சங்க தலைவர் மஞ்சை மோகன் கலெக்டரிடம் அளித்துள்ள மனு;நீலகிரியில் கடந்த ஐந்து ஆண்டுகளில், 34- பேர் வனவிலங்குகளால் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். மலை காய்கறி விவசாயம் பல ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் கிராமங்களுக்குள் வனவிலங்குகள் சாதாரணமாக உலா வந்து பயிர்களை சேதப்படுத்தி நஷ்டம் ஏற்படுத்தி வருகிறது. நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அந்தந்த வன கோட்ட வன ஊழியர்கள் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பொதுமக்கள் வனத்துறையினரை தொடர்புக்கொள்ள கட்டணமில்லா தொலைப்பேசி எண் ஏற்படுத்திட வேண்டும். நீலகிரி போன்ற அடர்ந்த வனப்பகுதிக்குள் மொபையில் தொடர்பு கொள்ள முடியாததால் வனத்துறை ஊழியர்களுக்கு 'வாக்கி- டாக்கி' வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.