நகரப்பகுதியில் கொட்டப்படும் குப்பை சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்பு
கூடலுார் : 'கூடலுார் நகரப்பகுதியில் நகராட்சி அறிவிப்பை மீறி திறந்தவெளியில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலுார் நகரின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், திறந்தவெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நகரின் மையப்பகுதியில் திறந்தவெளியில் குப்பை கொட்டும் இடங்களில், நகராட்சி நிர்வாகம் சிறுபூங்கா அமைத்து நகரை அழகுபடுத்தி வருகிறது.மற்ற பகுதிகளில், திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தடுக்க நகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே பகுதியில் அதிகளவில் மக்கள் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால், சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'நாகராட்சியின் அறிவிப்பு மீறி திறந்த வெளியில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, நகராட்சி அறிவிப்பை மீறி திறந்து வெளியில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும். இதன் மூலம் திறந்த வெளியில் குப்பை கொட்டுவதை முழுமையாக தடுக்க முடியும்,' என்றனர்.