ஹிரியோடைய்யா திருவிழா கோலாகலம்; படுகர் கிராமங்களில் பக்தி பரவசம்
கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக சமுதாய மக்களின் குலதெய்வமான 'ஹிரியோடைய்யா' திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள், நேற்று காலை கிராம கோவிலில் இருந்து, வனப்பகுதியில் அமைந்துள்ள பனகுடிக்கு (வனகோவில்) சங்கொலி எழுப்பி, ஊர்வலமாக சென்றனர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடை திறக்கப்படும் பனகுடியில், பிரம்புகளை உரசி அதிலிருந்து வெளியேறும் தீப்பொறியில் நெய் தீபம் ஏற்றி, முதல் கன்றுக்குட்டி ஈன்ற பசு மாட்டின் பால், கொம்பு தேன் மற்றும் தும்பை ஆகியவற்றை கொண்டு ஐயனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, பாரம்பரிய உடையுடன், பக்தர்கள் காணிக்கை செலுத்தி, ஐயனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜை நிறைவடைந்த நிலையில், பக்தர்கள் பனகுடியில் இருந்து, சங்கொலி எழுப்பி, ஊர்வலமாக மீண்டும் கிராமத்திற்குள் அமைந்துள்ள கோவிலை அடைந்தனர். அறுவடை திருவிழா விழாவில் முக்கிய அம்சமாக, இன்று காலை, கிராமத்தில் அமைந்துள்ள 'ஹக்க பக்க' கோவிலில் 'ஹரிக்கட்டு' அறுவடை திருவிழா நடக்கிறது. கோவில் கல் துாணில் எள் மற்றும் பருத்தி மூலம் நெய் தீபம் ஏற்றி, வனப்பகுதியில் இருந்து, ஏற்கனவே கொண்டுவரப்பட்ட மூங்கில் தழைகளை கயிறாக நெய்து, கோதுமை உள்ளிட்ட, தானிய வகைகளை கோர்த்து, 'ஹக்கபக்க' கோவிலில் கட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்வாறு பூஜை நடத்துவதன் மூலம், விவசாயம் செழித்து, மக்களுக்கு உணவு பஞ்சம் இருக்காது என்பதும், ஐதீகமாக உள்ளது. இந்த விழாவை ஒட்டி, தொதநாடு சீமையை தலைமை இடமாகக் கொண்ட கடநாடு, ஒன்னதலை, கக்குச்சி, பனஹட்டி மற்றும் டி. மணியட்டி கிராமங்கள் விழா கோலம் பூண்டிருந்தன.