பணத்தை இழந்து விட்டால்...! சைபர்கிரைம் அவசர எண்ணை உடனே தொடர்பு கொள்ளவும்; இதுவரை 80 புகார்கள்: 25 மனுக்களுக்கு தீர்வு; ரூ.2 கோடி மீட்பு
ஊட்டி : 'ஆன்லைன்' மோசடியில் பணத்தை இழந்து விட்டால், உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டால், பணத்தை மீட்டு தர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என, 'சைபர்கிரைம்' போலீசார் தெரிவித்துள்ளனர்.'சைபர் கிரைம்' என்பது கணினி நெட்வொர்க் அல்லது நெட்வொர்க் சாதனத்தை உள்ளடக்கிய ஒரு குற்றச் செயலாகும். பெரும்பாலான சைபர் கிரைம்கள் லாபம் ஈட்ட பயன்படுத்தினாலும், சில சைபர் கிரைம்கள் கணினிகள் அல்லது சாதனங்களுக்கு எதிராக நேரடியாக சேதம் ஏற்படுத்தி, அல்லது செயலிழக்க செய்வதாகும். மேலும், சட்டவிரோத தகவல், படங்கள் அல்லது பிற பொருட்களை பரப்ப கணினிகள் அல்லது நெட்வொர்க்களை பயன்படுத்துகின்றனர். அதில், மின்னஞ்சல், இணைய மோசடி, அடையாள மோசடி, அத்துடன் நிதி கணக்கு, கிரெடிட் கார்டு அல்லது பிற கட்டண அட்டை தகவல்களை திருடும் முயற்சிகள் உட்பட பல்வேறு வகையான லாபம் சார்ந்த குற்ற செயல்பாடுகளும் அடங்கும். குற்ற செயல்களின் வகைகள்
ஊட்டி எஸ்.பி., அலுவலக வளாகத்தில், 'சைபர் கிரைம்' போலீஸ் ஸ்டேஷன் செயல்படுகிறது. இந்த அலுவலகத்துக்கு, சமீபகாலமாக பல புகார் வந்துள்ளன. அதில், 'முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நம்ப வைப்பது; திருமண செயலிகள்; நெட் பேங்கிங் ரகசிய குறியீடு எண்ணை மாதம் ஒரு முறை மாற்றம் செய்ய வேண்டும் என கூறுவது; ஓ.எல்.எக்ஸ்., ஆன்லைன் செயலிகள் வாயிலாக கடன் வழங்குவது; கூகுள் ரிவ்யூ வாடிக்கையாளர் சேவை; டிஜிட்டல் மார்க்கெட்டிங்; ஜி.எஸ்.டி., வரி; சம்கார்டு; ஸ்காலர்ஷிப் பெற்று தருவதாக கூறுவது; பகுதி நேர வேலை வாய்ப்பு; செயலிகள் மூலம் பரிசுத்தொகை வழங்குவது,' என, பல வகைகளில் மோசடி சம்பவங்கள் நடந்தது குறித்து புகார்கள் வந்துள்ளது. இதுவரை, 80 புகார் மீது விசாரணை
அதில், மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கடந்த இரண்டு ஆண்டில்,80 புகார்கள் பெறப்பட்டுள்ளன. புகார் மனு மீது விசாரணை மேற்கொண்டு, 25 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. 55 புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொண்டு, 15 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை, 2 கோடி ரூபாய் புகார்தாரர்களுக்கு திரும்ப கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. போலீஸ் கூறுவது என்ன ?
சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரவீணா கூறுகையில் , ''ஆன்லைன் சேவைகள் அதிகரித்துள்ள நிலையில்,தொழில் நுட்பங்களை பயன்படுத்தி குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இது போன்ற சைபர் கிரைம் சார்ந்த குற்றங்களில் சிக்காமல், ஏமாறாமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வாறு ஆன்லைன் மூலமாக மோசடியாக பணத்தை இழந்து விட்டால், உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண்-1930 ஐ விரைவாக தொடர்பு கொண்டால், இழந்த பணத்தை மீட்டு தர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களுக்கு www.cybercrime.gov.inஎன்ற இணையதளத்தின் மூலமும் புகார் அளிக்கலாம்,'' என்றார்.