நகராட்சியில் சர்வர் பிரச்னை; உள்ளூர் வியாபாரிகள் குழப்பம்
ஊட்டி; ஊட்டி நகராட்சியில் ஏற்பட்ட 'சர்வர்' பிரச்னையால் வரியினங்களை செலுத்த முடியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. 1.30 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். தவிர, நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் கடைகள், தனியார் நிறுவனங்கள் சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை மக்கள் ஆண்டு தோறும் செலுத்தி வருகின்றனர். 'வரியினங்களை பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும்,' என, நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான கடைகளின் 'லைசன்ஸ்' புதுபிப்பு; வரி போன்றவைகள் நகராட்சியின் 'ஆன்லைன்' பண பரிவர்த்தனை அல்லது நேரடியாக நகராட்சி அலுவலகத்துக்கு சென்று செலுத்தி வருகின்றனர்.கடந்த ஒரு வாரமாக இப்பணிகளுக்காக நகராட்சி அலுவலகம் செல்லும் பலர்'சர்வர்' பிரச்னையால், லைசன்ஸ், வரியினங்களை செலுத்த முடியாமல் திரும்பி செல்கின்றனர். குறிப்பாக, கால அவகாசம் முடிந்தவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மக்கள் கூறுகையில், 'இந்த பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.