காந்தி ஜெயந்தி தினத்தில் ஆய்வு; 24 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
குன்னுார்; காந்தி ஜெயந்தி தினத்தில், இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை வழங்காமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்திய, 24 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொழிலாளர் நல துறை தெரிவித்துள்ளது. குன்னுார் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கை: சென்னை, தொழிலாளர் ஆணையர் உத்தரவின் பேரில், குன்னுார் தொழிலாளர் துறை அலுவலர்கள், 'குன்னுார் ஊட்டி, கோத்தகிரி மற்றும் கூடலுார் பகுதிகளில், கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள்,' என, மொத்தம், 58 நிறுவனங்களில், காந்தி ஜெயந்தி தினத்தில் ஆய்வு செய்தனர். பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்காமல் இருப்பது தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், பணிக்கு அமர்த்திய, 24 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டு, தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் உணவு சட்ட விதிகள் கீழ் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.