கோவில் திருவிழாவில் பறவை காவடி பால்குடம் பரவசத்தை ஏற்படுத்திய கதகளி
பந்தலுார் : பந்தலுார் அருகே நெல்லியாளம் பகுதியில் அருள்மிகு முத்துமாரியம்மன், ஆனந்த கல்யாண சுப்ரமணியர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், 21ம் ஆண்டு தேர்திருவிழா, 12-ம் தேதி மகா கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம், ஆராதனையுடன் தொடங்கியது. தொடர்ந்து, கொடியேற்றுதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகளும், ஆனந்த கல்யாண சுப்ரமணியனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மனை குடி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை சிறப்பு அபிஷேகங்களும், ஆற்றங்கரைக்கு சென்று அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் பறவை காவடி, கதகளி, வாணியம்பாடி தப்பாட்டம் ஊர்வலம் நடந்தது. அதில், பக்தர்கள் பக்தி பரவசத்துடன், 9 -பறவை காவடிகளில் தொங்கியபடி வந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. தொடர்ந்து, பாலாபிஷேகம் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை தேர் ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், இளைஞர் குழுவினர் மற்றும் மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.